Sunday, September 5, 2010

ரயில்வே வேலை வாய்ப்பில் "மெகா' மோசடி : சி.பி.ஐ., கிடுக்கிப்பிடியால் அதிகாரிகளுக்கு சிக்கல்

புதுடில்லி : ரயில்வே துறையில் மீண்டும் ஒரு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை, ஊழியர் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ளது. இந்த முறைகேட்டில் சில மூத்த 7அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., சார்பில், ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே, திட்டமிட்டு வெளியிடப்பட்டதும், அந்த வினாத்தாள்கள் பணத்துக்கு முறைகேடாக விற்கப்பட்டதும் கடந்த சில மாதங்களுக்கு முன் அம்பலமானது. இது தொடர்பாக, சில முக்கிய அதிகாரிகள் சிக்கினர்.தற்போது ரயில்வே துறையில் மீண்டும் அம்பலமாகியுள்ள ஒரு மெகா ஊழல் குறித்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஐ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார், ரயில்வே வாரிய தலைவர் விவேக் சகாய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில், "மேற்கு மத்திய ரயில்வேயின் தற்போதைய பொது மேலாளர் வி.கே.மாங்க்லிக், பணியாளர் நலத் துறை அதிகாரி ஒருவர், ஆகியோரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரிக்க அனுமதி வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கண்ட அதிகாரிகள் இருவரும் கடந்த ஏப்ரல் 2008 முதல் ஜூன் 2009 வரையிலான காலத்தில், "குரூப் டி' பணியிடங்களுக்கு, ஆட்களை முறைகேடாக நியமனம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தங்களின் பதவிகளை தவறான முறையில் பயன்படுத்தி, 370 பேரை நியமனம் செய்துள்ளனர்.இருவரும், குரூப் டி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர். இந்த பணியிடங்கள், குறிப்பிட்ட சில அவசரகாலங்களில் மட்டுமே நிரப்பப்படுபவை. ரயில் இயக்கம், பயணிகளுக்கான வசதி, பாதுகாப்பு போன்றவை தொடர்பான விஷயங்களை கருதியே, இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், மேற்கண்ட அதிகாரிகள் இருவரும், இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.இந்த பணியிட நியமனத்தின்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்வும் நடத்தப்படவில்லை. தகுதியற்ற ஆட்கள் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணியிடங்களை நிரப்புவதற்காக, சம்பந்தபட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர்.

வடக்கு எல்லை ரயில்வேயைச் (கவுகாத்தி) சேர்ந்த முன்னாள் பொது மேலாளர் சன்வால்கா, தான் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக (2007ல்), குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்துள்ளார். அதேபோல், வடக்கு எல்லை ரயில்வேயின் மற்றொரு முன்னாள் பொது மேலாளர் அசுதோஸ் சுவாமி மீதும் பணி நியமனம் தொடர்பாக புகார் உள்ளது. இவர்கள் இரண்டு பேரின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வேயின் மற்ற மண்டலங்களிலும் ஆட்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., தீவிரமாக விசாரிக்க துவங்கியுள்ளது. சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ள இந்த முறைகேடு, ரயில்வே துறையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "சிக்கலில் மாட்டி விடுவோமோ' என, அதிகாரிகள் பலர் பயத்தில் உள்ளனர்.

source: dinamalar.com

1 comment:

  1. This is highly informatics, crisp and clear. I think that everything has been described in systematic manner so that reader could get maximum information and learn many things. mega888 apk

    ReplyDelete